×

20 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம்.. பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த தடை

பெங்களூரு : பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பஞ்சத்தின் தாக்கம் சாமானிய மக்களுக்கு மட்டுமில் லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ள நிலையில், பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு தடை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறி தண்ணீரை பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தடையை தொடர்ந்து மீறினால் ரூ.5,000 அபராதத்துடன் தினமும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 20 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம்.. பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Bengaluru ,Municipal Drinking Water Board ,Dinakaran ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து...